தினம் ஒரு குட்டிக்கதை - பால.ரமேஷ்

  *கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் அர்ஜுனனை விட?** 

அர்ஜுனன் ஒருநாள்.. கிருஷ்ணரிடம் கேட்டான்.....?

தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...?

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் ?"

சரி, என்னுடன் வா, காட்டுகிறேன் என்று கூறி அர்ஜுனனை அழைத்துச் சென்றார் கிருஷ்ணன்.

இருவரும் பிராமணர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள்.

யாகம் நடத்த சந்தனக் கட்டைகள் வேண்டும் என்றார்கள்.

மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை நாடு முழுவதும் அனுப்பினார்.

ஆனால் அப்போது மழைக்காலம்.

கொண்டு வந்த மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன.

அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது.

இருவரும் கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை வைத்தார்கள்.

கர்ணன் யோசித்தான்.

"அடாடா... இது மழைக்காலம்.

இந்த மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள் கிடைக்காது. அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்" என்றான்.

கோடரியை எடுத்து வந்தான்.

மாளிகையின் கதவுகளும் சன்னல்களும் சந்தன மரத்தால் செய்யப்பட்டவை.

கர்ணன் அவற்றை வெட்டி எடுத்துக் கொடுத்தான்.

இருவரும் திரும்பி வரும்போது கிருஷ்ணர் கேட்டார்.

"இப்போது புரிகிறதா அர்ஜுனா... தருமரிடம் கதவையும் ஜன்னல்களையும் உடைத்துத் தாருங்கள் என்று கேட்டிருந்தால் அவரும் உடனே தந்திருப்பார்தான்.

ஆனா அவர் தானாகவே அவ்வாறு சிந்திக்கவில்லை.

ஆனால் கர்ணன்...

நாம் கேட்கவே இல்லை. அவனாகவே யோசித்துச் செய்தான்.

யுதிஷ்டிரர் கொடுப்பது தர்மம் .......

கர்ணன் கொடுப்பது விருப்பம் ......

எந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப்படும் செயலாகும்"...

இதிலிருந்து தெரிவது என்ன?  

கடமைக்காகவோ, நிர்ப்பந்தமோ, தேவையோ, எதுவாக இருந்தாலும் செய்வதை விருப்பத்துடன் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

வாழும் வரை பிறருக்கு துன்பம் தராமல்,  
பிறர் மனம் நோகாமல் வாழ்வோம்.  
விழிப்புணர்வின்றி வாழ்வதே பாவம்.  
விழிப்புணர்வுடன் வாழ்வதே புண்ணியம்.