சோற்றுடன் தட்டைப்பயறு அல்லது காராமணிக் குழம்பைச் சேர்த்து உண்ணுவது நீரிழிவு பாதிப்புடையோருக்குச் சிறந்த உணவுத் தெரிவாக இருக்கும் என்று ஊட்டச்சத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரக வடிவத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் ‘கிட்னி பீன்ஸ்’ என அழைக்கப்படும் தட்டைப்பயறு, குறைந்த கிளைசீமிக் குறியீட்டெண் (24) கொண்டது. இதனால், உணவில் இருந்து இரத்தத்தில் சர்க்கரை சேரும் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். தட்டைப்பயற்றில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துகள், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
சோற்றுடன் இதனைச் சேர்த்து உண்ணும்பொழுது, அவற்றில் உள்ள புரதத்தில் இருந்து சில இன்றியமையாத அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன.
உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு ஏற்பட முக்கியமானதொரு காரணம். தட்டைப்பயற்றை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும். இதிலுள்ள புரதத்தாலும் நார்ச்சத்தாலும் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பியதுபோல் இருக்கும். அத்துடன், இது சீராக ஆற்றலை வழங்குவதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
தட்டைப்பயற்றில் பல தாதுப்பொருள்களும் உயிர்ச்சத்துகளும் இருப்பதால் இயற்கையாக நோயெதிர்ப்பாற்றலைக் கூட்டும் எனக் கருதப்படுகிறது.